Publish Date: Wed, 24 Dec 2008 (13:24 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (13:24 IST)
ஈரோடு: மத்திய அரசு காப்பீடு துறையில் கொண்டுவந்துள்ள சீர்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது என்று பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆயுள் காப்பீட்டு நிறுவன தலைமை அதிகாரி ஆனந்த் பெஜாவர் கூறினார்.
பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நேற்று எஸ்.பி.ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், காப்பீடு செய்து கொணடவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆனந்த் பெஜாவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள காப்பீடு துறை சீர்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது. இந்த மசோதா மூலம் 26 விழுக்காடாக உள்ள அந்நிய முதலீடு 49 விழுக்காடாக உயர்த்த முடியும். இதனால் அந்நிய மூலதனத்தை அதிகம் பெறலாம்.
அந்நிய முதலீட்டை அதிகரிப்பதன் மூலம், நமது நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்திவிடும் என்று பயப்பட தேவையில்லை. ஏனெனில் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை சட்டம் வெளிநாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி, நிறுவன லாபம் இங்குள்ளவர்களுக்கே மட்டுமே கிடைக்க வழி செய்கிறது.
எஸ்.பி.ஐ காப்பீடு நிறுவனம், தற்போது ரூ. 1,000 கோடி முதலீட்டுடன், 450 கிளைகள் மூலம் செயல்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் 60 ஆயிரம் முகவர்கள் உள்ளனர். இதில் சுமார் 90 லட்சம் பேர் காப்பீடு செய்துள்ளனர்.
எஸ்.பி.ஐ காப்பீடு நிறுவனம், தனியார் காப்பீடு நிறுவனங்களில், தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதைச் சார்ந்த 6 வங்கிகளின் 15 ஆயிரத்து 500 கிளைகள் மூலம், 30 க்கும் மேற்பட்ட காப்பீடு திட்டங்களை, செயல்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 48 விழுக்காடு வர்த்தகம் கிராமப்புறங்களில் நடைபெற்றுள்ளது.
சுயஉதவிக் குழுக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம், ஒரிசா மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்மையில் சென்னையிலும் இத்திட்டம் றிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, நாளொன்றுக்கு ரூ.2 வீதம் ஆண்டுக்கு ரூ.600 காப்பீடு தொகையாக செலுத்தினால், காப்பீடு செய்து கொண்டவர் இறக்க நேரிடும்போது, அவரது குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் கட்டிய தொகையில் பாதி திருப்பித் தரப்படும் என்று தெரிவித்தார்.