Publish Date: Mon, 22 Dec 2008 (14:13 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (14:10 IST)
புது டெல்லி: மாநிலங்களவையில் இன்று பலத்த அமளிக்கு இடையே காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவை இன்று காலை இரண்டு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணியளவில் மாநிலங்களவை கூடியதும், அவைக்கு தலைமை வகித்த துணை தலைவர் ரஹ்மான் கான், நிதி துறை இணை அமைச்சர் பி.கே.பன்சாலை, காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய மசோதைவை தாக்கல் செய்யும் படி அழைத்தார்.
அமைச்சர் பி.கே.பன்சால் மசோதாவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அமையின் மைய பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். சிலர் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தனர்.
அதே நேரத்தில் அமைச்சர் பன்சால் மசோதைவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அமைச்சரிடம் இருந்து, மசோதாவை பிடுங்க முயற்சித்தார்.
அயல் உறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் உறுப்பினர்களை தள்ளிவிட்டார். மற்றொரு அமைச்சரான மீரா குமார் முன்வரிசைக்கு சென்று அமைச்சருக்கு முன் நின்று கொண்டு அவர் மீது தாக்குல் நடக்காதபடி காப்பாற்றினார்.
இதனிடையே அமைச்சர் பன்சால் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்த வகை செய்கிறது.
மாநிலங்களவையில் காப்பீடு திருத்த மசோவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக, துணைத் தலைவர் ரஹ்மான் கான் அறிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, காப்பீடு திருத்த மசோதைவை முன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. மத்திய அரசுக்கு அரசின் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்த இடதுசாரி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. இடதுசாரி கட்சிகள் ஜீலை மாதம் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.
Webdunia
Publish Date: Mon, 22 Dec 2008 (14:13 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (14:10 IST)