Publish Date: Sat, 20 Dec 2008 (17:07 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (17:07 IST)
மும்பையில் பங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்த மாதம் தாம் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகள் எதையும் தொடர்ந்து வைத்துக் கொள்ள இயலாது என்பதாலேயே தமது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று ஜெய்ராம் ரமேஷ் பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியைத் தாண்டி வர்த்தகம் குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஆய்வு செய்வதாக இருந்தது. வாகா-அட்டாரி எல்லைப்பகுதி வழியாக வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவதாக இருந்தது.
மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த ஆண்டில் சுமார் 2 கோடி கிலோ அளவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
வாகா எல்லைப் பகுதி வழியாகவும், ரயில் மார்க்கமாகவும் பாகிஸ்தானுக்கு தேயிலை அனுப்புவதற்கு அனுமதி அளிப்பது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் அலி சர்தாரியும் சந்தித்துப் பேசிய போது முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Sat, 20 Dec 2008 (17:07 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (17:07 IST)