Publish Date: Sat, 13 Dec 2008 (12:43 IST)
Updated Date: Sat, 13 Dec 2008 (12:29 IST)
சிகாகோ: அமெரிக்கா பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வரும் போது, அமெரிக்காவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டியை எதிர்கொள்ளும் விதமாக புதிய வர்த்தக முறை, தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் படி கூறிய ஆலோசனைகளை ஏற்க தவறி விட்டன என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா குற்றம் சாட்டினார்.
சிகாகோவில் செய்தியாளர்களிடம் பேசும் போது, நான் ஒன்றரை வருடங்களுக்கு முன், டிராய்ட் நகரில் அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தில், அவற்றின் நிதி நிலைமை பற்றி கவலை தெரிவித்தேன். அந்த கூட்டத்தில் மாறி வரும் போட்டிகள் மிகுந்த சூழலில், புதிய தொழில் நுட்பத்தை கடைபிடிப்பதும், புதிய வியாபார முறையை மேற்கொள்வதால் மட்டுமே, போட்டிகளை எதிர் கொள்ள முடியும் என்று கூறினேன் என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனைகளை வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஏற்க தவறி விட்டன என்று குறை கூறிய ஒபாமா, இந்த தொழில் துறை சீர்குலைவதை, நாடு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் இதன் விளைவுகள் அமெரிக்க பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளையும் பாதிக்கும் என்று ஒபாமா கூறினார்.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி அதிகரிப்பது பற்றியும், கடந்த 26 வருடங்களில் இல்லாத அளவு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வேலை இல்லாத காலத்திற்கான, அரசின் நிதி உதவி பெறுவதற்காக 5 லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பித்துள்ளது பற்றி கூறுகையில், அமெரிக்காவின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சீர்குலைவதை தடுக்கும் வகையில், இந்த நிறுவனங்கள், பொதுமக்களின் வரிப்பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் முறையாக நடந்து கொள்வதாக இருந்தால், அரசு குறுகிய கால நிதி உதவி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Sat, 13 Dec 2008 (12:43 IST)
Updated Date: Sat, 13 Dec 2008 (12:29 IST)