Publish Date: Thu, 11 Dec 2008 (15:38 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
புது டெல்லி: வங்கிகளில் தேவையான பணப்புழக்கம் இருந்தும், வங்கிகள் கடன் கொடுப்பதில்லை என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம், மற்ற வங்கிகள் வைக்கும் அதன் மொத்த வைப்பு நிதியில் வைக்கும் இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது. இதே போல் எஸ்.எல்.ஆர், ரிபோ, ரிவர்ஸ் ரிபோ விகிதங்களையும் குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி, நிதி சந்தையில் ரூ3 லட்சம் கோடி பணப்புழக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் புது டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பேசும் போது, வங்கிகளில் அதிக பணப்புழக்கம் இருந்த போதிலும், அவை கடன் கொடுக்காமல் இருப்பது பிரச்சனையாக உள்ளது. வங்கிகளுக்கு பணம் கிடைப்பது பிரச்சனை அல்ல. வங்கிகளிடம் தேவையான பணம் உள்ளது. அவைகளக்கு கிடைக்கும் அளவு, வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. அரசு வங்கிகளிடம் உள்ள பணத்தை கடன் கொடுக்க வைக்கும் முயற்சிகள் எடுக்கும் என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு என்பது, நல்ல வளர்ச்சி தான். பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை போக்க, மத்திய அரசு அறிவித்துள்ள ஒவ்வொன்றும் செயலுக்கு கொண்டுவரும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.