Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை
, திங்கள், 8 டிசம்பர் 2008 (15:44 IST)
புது டெல்லி: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடை, பின்னலாடை, தோல் பொருட்கள், கைவினை பொருட்கள், வைரம், நகைகள் போன்றவை கணிசமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போதைய நெருக்கடியால், இந்த ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இவை அதிக அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய தொழில்களாகும். இதன் நெருக்கடியால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு நேற்று மத்திய அரசு சலைகைகளை அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய திட்டக்குழு தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பேசுகையில், ஜவுளி, தரை விரிப்பு, கைத்தறி, கைவினை பொருட்கள், தோல் பொருட்கள், வைரம், நகை, கடல் உணவு பொருட்கள், சிறு, நடுத்தர தொழில் பிரிவில் உள்ள ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு 2 விழுக்காடு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும்.

இந்த சலுகை அடுத்த வருடம் மார்ச் வரை வழங்கப்படும். அதிகபட்ச வட்டியாக 7 விழுக்காடு வசூலிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்தும் உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி போன்ற வரிகள் திருப்பி வழங்கப்படும். அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்கள் அயல்நாட்டு முகவர்களுக்கு கமிஷன் வழங்குகின்றன. இந்த கமிஷனுக்கு பிடித்தம் செய்யப்படும் சேவை வரி திருப்பி வழங்கப்படும். இது செய்யப்படும் பொருட்களின் மதிப்பில் அதிக பட்சம் 10 விழுக்காடு வரை திரும்ப வழங்கப்படும்.

இரும்பு தாது ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கும் சலுகை வழங்கப்படும். சுத்தமான பிரித்து எடுக்கப்பட்ட இரும்பு தாதுக்கு ஏற்றுமதி வரி நீக்கப்படுகிறது. மற்ற இரும்பு தாதுவுக்கு ஏற்றுமதி வரி 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் நாப்தாவிற்கு இறக்குமதி வரி நீக்கப்படுகிறது. இவ்வாறு எரிபொருள் இல்லாமல் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாப்தா எரிபொருள் இல்லாமல், செயல் படாமல் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், மீண்டும் மின் உற்பத்தியில் ஈடுபட முடியும். இவை இயங்குவதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

பொதுத்துறை வங்கிகள் விரைவில், ரூ.5 லட்சம் வரை வாங்கும் வீட்டு வசதி கடனுக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வாங்கும் வீட்டு வசதி கடனுக்கு சலுகைகளை அறிவிக்கும் என்று அலுவாலியா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil