Publish Date: Sat, 06 Dec 2008 (15:10 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (15:10 IST)
மும்பை: பணவீக்கம் குறைந்து வரும் நேரத்தில், தொழில், வர்த்தக துறையினருக்கு எளிதில் கடன் கிடைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இன்று, வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டியை குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வர்த்தக வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டியை (ரிபோ) 1 விழுக்காடு குறைத்துள்ளது.
முன்பு ரிபோ வட்டி விகிதம் 7.5 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி குறையும்.
இதே போல் வங்கிகள் தங்களிடம் உள்ள உபரி நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் (ரிவர்ஸ் ரிபோ). இதற்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதம் 6 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு வசதி கடன் அதிகப்படுத்தவும், இதன் வட்டியை குறைக்கும் வகையில் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
இதனால் தற்போது ஏறக்குறைய எவ்வித வேலைகளும், வியாபாரமும் இல்லாமல் இருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு தேவையான கடன் கிடைக்கும். அதே போல் வீட்டு கடனும் எளிதாக கிடைப்பதுடன் வட்டி குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தேசிய வீட்டு வசதி வங்கியிடம் இருந்து, மற்ற வங்கிகள், கூட்டுறவு வீட்டு வசதி வங்கிகள், சலுகை வட்டியில் கடன் வாங்குகின்றன. இந்த கடனை பயன்படுத்தி வீடு வாங்குவதற்கும், கட்டுவதற்கும் கடன் கொடுக்கின்றன.
இந்த கடன் வழங்கும் நடைமுறைகள், அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதே போல் சிறு, குறு தொழில் பிரிவுகளுக்கு எவ்வித சிரமம் இன்றி கடன் கிடைக்க, ரிசர்வ் வங்கி, சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (சிட்பி) ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
Webdunia
Publish Date: Sat, 06 Dec 2008 (15:10 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (15:10 IST)