Publish Date: Thu, 04 Dec 2008 (12:26 IST)
Updated Date: Thu, 04 Dec 2008 (12:24 IST)
நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பயிர்களை எப்படி காப்பது என்பது குறித்து விருத்தாசலத்தில் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பல்வேறு நிலைகளில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தகுந்த வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் நீர் தேங்கி நெற்பயிரை பாதிக்கும்.
மேலும் பூச்சி பூஞ்சானங்களால் நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்படலாம்.
எனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி, பயிர் மூழ்காத அளவு நீரை வெளியேற்றவேண்டும்.
மூழ்கியிருக்கும் பகுதிகளில் நட்ட குத்துக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்யவேண்டும்.
தற்போது நிலவிவரும் மழையோடு கூடிய மப்பும் மந்தாரமுமான சூழலில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பயிரில் குலைநோய், பாக்டீரியா இலைக்கருகல் மற்றும் பாக்டீரியா இலைக் கீறல் நோய்களின் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது.
இதற்கு சூடோமோனஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியாவை ஒருகிலோ சாண எரு அல்லது மணலுடன் கலந்திடவேண்டும்.
மேலும் ஒரு ஏக்கருக்கு கார்பன்டசிம் 100 கிராம் அல்லது டிரைசைக்ளோசால் 200 கிராம் மருந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
வயல்களில் இருந்து நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சி சரியாக இல்லாத இடங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 55 கிலோ யூரியாவுடன், 45 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒருநாள் இரவு வைத்திருந்து அத்துடன் 42 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இடவேண்டும்.
இந்த உரங்களை இடும்போது வயலில் சீராக தண்ணீர் வைத்துக்கொள்வதுடன் நீர் வெளியேறாதவாறு பராமரிப்புச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 04 Dec 2008 (12:26 IST)
Updated Date: Thu, 04 Dec 2008 (12:24 IST)