Publish Date: Wed, 03 Dec 2008 (11:54 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (11:53 IST)
கோவை: சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு சொத்து பிணையின்றி காப்புறுதிக் கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) இணைந்து சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களுக்கான கடன் காப்புறுதி நிதி குழுமத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கின.
சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு, இந்த குழுமம் சார்பில் ரூ.50 லட்சம் வரை சொத்து பிணையம் இல்லாமலும், மூன்றாவது நபர் உத்தரவாதம் இன்றியும் கடன் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கடன்களில் 75 விழுக்காடு வரை, அதிகபட்சமாக ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்புறுதி அளிக்கப்படுகிறது.
இந்த காப்புறுதித் திட்டத்தின்கீழ் கடன் பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள், தாங்கள் பெற விரும்பும் கடன் தொகையில் 1.5 விழுக்காடு காப்புறுதி கட்டணமாக ஒரு முறையும், 0.75 விழுக்காடு ஆண்டு சேவை கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள், மகளிர் தொழில்முனைவோர்கள் தாங்கள் பெற விரும்பும் கடன்தொகையில் 1 விழுக்காடு காப்புறுதி கட்டணமாகவும், அரை விழுக்காடு சேவை கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய பொதுத்துறை, தனியார் வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல ஊரக வங்கிகள், தேசிய சிறு தொழில் கழகம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களை தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் வெ.பழனிக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Wed, 03 Dec 2008 (11:54 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (11:53 IST)