Publish Date: Tue, 02 Dec 2008 (10:17 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (10:17 IST)
தூத்துக்குடி: மூலப்பொருளுக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டால் யூரியா உரம் உற்பத்தியை உடனே தொடங்க தயாராக இருப்பதாக தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலைத் துணைத் தலைவர் இர. முத்துமனோகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்பிக் நிறுவனம் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 15 மாதங்களாக உர உற்பத்தியை நிறுத்தி இருந்தது. தற்போது கடந்த 23 தேதி முதல் ஸ்பிக் 20: 20 காம்ப்ளக்ஸ் உரம் உற்பத்தியை தொடங்கியுள்ளோம்.
நாங்கள் உற்பத்தி செய்தது வெறும் 5 ஆயிரம் டன் மட்டுமே. ஆனால், இந்த உரம் கேட்டு 50 ஆயிரம் டன்னிற்கு மேல் ஆர்டர் வந்துள்ளது.
ஸ்பிக் உர தொழிற்சாலையில் நாப்தாவை மூலப் பொருளாக கொண்டு யூரியா உரம் தயாரிக்கப்படுகிறது.
நாங்கள் நாப்தாவை, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்கி வந்தோம்.
நாப்தா விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு டன் நாப்தா ரூ. 52 ஆயிரம் வரை அதிகரித்தது. ஆனால், யூரியாவை டன் ரூ. 4,650 என்ற விலைக்கு தான் விற்க முடியும்.
மத்திய அரசு சார்பில் உர உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் நாப்தா விலை ஏற்ற, இறக்கத்திற்கு தகுந்தவாறு வழங்கப்படுவதில்லை.
அத்துடன் சரியான நேரத்தில் மானியம் கிடைப்பதில்லை. இதனால், அதிக விலை கொடுத்து நாப்தாவை வாங்க முடியாதநிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது நாங்கள் மானியமே கேட்கவில்லை. மூலப்பொருளுக்கான செலவை அரசு ஏற்றால், உற்பத்திக்கான செலவை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.
இதற்கு அரசு சம்மதித்தால் உடனே யூரியா உற்பத்தியை தொடங்க ஸ்பிக் ஆலை தயார் நிலையில் இருக்கிறது என்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 02 Dec 2008 (10:17 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (10:17 IST)