Publish Date: Sat, 29 Nov 2008 (18:59 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (18:59 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக நாபர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் மாவட்ட வங்கி அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நபார்டு அடுத்த ஆண்டுக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இதை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் வெளியிட்டார். முதல் பிரதியை முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என். சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.
நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் இரா. சங்கர் திட்ட அறிக்கை பற்றி விளக்கினார்.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறுகிய காலக் கடன் ரூ.291.75 கோடி, முதலீட்டு விவசாயக் கடன் ரூ.288.45 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்ணை சாராத் தொழிலுக்கு ரூ.176.15 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.725.55 கோடி, உணவுப் பொருள் பதப்படுத்தலுக்கு ரூ.5.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நில மற்றும் நீர்வளம், வேளாண் இயந்திரங்கள், தோட்டப் பயிர், மருத்துவப் பயிர், வன மேம்பாடு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு என 16 பகுதிகளாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுய உதவிக் குழுக்கள், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் ஏனைய அரசு சார் நிறுவனங்களின் பணிகள் பற்றிய திட்டங்களும் விளக்கப்பட்டுள்ளன.
இந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வங்கிகள், கடன் வழங்குவது பற்றிய திட்டங்களை தயாரிக்கும்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் சக்திவேல், மகளிர் திட்ட அலுவலர் தெய்வநாயகி, முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.