Publish Date: Tue, 25 Nov 2008 (10:18 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (10:17 IST)
கோவை, நவ. 24: கோவையிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள வார்ப்பட (பவுண்டரி) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நல்ல வளர்ச்சியில் இருந்து. தற்போது தொடர் மின்வெட்டு காரணமாக 50 விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது.
இதில் முதலீடு அதிகரித்தபோதிலும், இந்த தொழிலுக்கு முக்கியத் தேவையான மின்சாரம் முழுமையாகக் கிடைக்காத காரணத்தால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது என வார்ப்பட தொழிற்சைலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு கோவை மண்டலத் தலைவர் சி.என்.அசோக், நிர்வாகிகள் சி.ஆர்.சுவாமிநாதன், என்.கிருஷ்ணசாம்ராஜ் ஆகியோர் கூறுகையில்,
இந்தியாவில் 4 ஆயிரத்து 500 வார்ப்பட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 80 விழுக்காடு சிறு தொழிற்சாலைகள், ஆயிரம் நிறுவனங்கள் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள்.
உலகளவில் இந்தியா வார்ப்பச தொழிலில், ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இந்த தொழில் துறையை 2010 ஆம் ஆண்டுக்குள் 3வது இடத்துக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல வளர்ச்சியை அடைந்து வந்தது. இதனால் வார்ப்பட தொழிலில் முதலீடுகள் அதிகரித்தன. உற்பத்தி 25 ஆயிரம் டன்களில் இருந்து 40 ஆயிரம் டன்களாக அதிகரித்தது. இதற்காக சுமார் ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளும் அதிகரித்தன. ஆனால், தற்போது நிலவும் மின்வெட்டு காரணமாக 50 விழுக்காடு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் அமைந்துள்ள வார்ப்பட தொழிற்சாலைகளுக்கு வரவேண்டிய வேலைகளில் 20% வரை மற்ற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.
இதில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு வரை லே-ஆப் வழங்கப்படுகிறது.
இதற்கு தேவாயான மூலப்பொருள் விலை குறைந்தும், மின்வெட்டு காரணமாக பயனில்லை: சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இரும்பு, தேனிரும்பு உள்ளிட்ட வார்ப்பட தொழிலுக்கு தேவையான மூலப் பொருள்களின் விலை 25 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
இந்நிலையில் மின்வெட்டு காரணமாக, மூலப்பொருள் விலை குறைந்தபோதிலும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்கள்.