Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோட்டார் பம்ப் குறியீடு திருத்தம்-சீமா கோரிக்கை!

மோட்டார் பம்ப் குறியீடு திருத்தம்-சீமா கோரிக்கை!
, திங்கள், 24 நவம்பர் 2008 (11:17 IST)
கோவை: மோட்டார் பம்ப்களுக்கு குறியீடு பொறிக்கும் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) வலியுறுத்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டு மோட்டார் பம்ப்செட்களின் மின்சக்தியை குறைத்து அதன் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் பம்ப் உற்பத்தியாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய மின்திறன் அமைவனம் சார்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மோட்டார் பம்ப்களுக்கு நட்சத்திர குறியீடு பொறிக்கும் திட்டத்தை அமல்படுத்தலாம் என சீமா சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சீமா தெரிவித்த பெரும்பாலான கருத்துகளை மத்திய மின்திறன் அமைவனம் ஏற்றுக்கொண்டது.

இந் நிலையில் நட்சத்திர குறியீடு பொறிக்கும் திட்டத்தை இறுதி செய்யும் கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது.

இதில் நிறுவன பதிவுக்கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைக்கப்பட வேண்டும்; மோட்டார் பம்ப் பெயர் பலகையில் இருக்கும் அதிகபட்ச சில்லரை விலையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பம்ப் உற்பத்தியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்று திட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரி உறுதி அளித்தார்.

இந் நிலையில் பம்ப் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் பழைய நிலையிலேயே இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பம்ப் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து கோவை மக்களவை உறுப்பினர் க.சுப்பரராயன், சீமாவின் முன்னாள் தலைவரும், கோண்டியா தலைவருமான ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஷிண்டே உறுதி அளித்துள்ளார் என்று சீமா தலைவர் ஜெயக்குமார் ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil