Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வளர்ச்சி பாதிக்கப்படாது-பிரதமர் மன்மோகன் சிங்.

வளர்ச்சி பாதிக்கப்படாது-பிரதமர் மன்மோகன் சிங்.
, சனி, 22 நவம்பர் 2008 (13:58 IST)
புது டெல்லி: உலகத்தில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கவலைபட தேவையில்லை. இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

புது டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சி 8 விழக்காடாக இருக்க பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். புதிய பொருளாதார கட்டமைப்பு உருவாக்க எடுக்கப்படும் முடிவுகளில், இந்தியாவின் பங்கும் இருக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு விடும் என்று கூறிய பிரதமர், 1991 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை உதாரணமாக சுட்டிக் காட்டினார். ( 1991 ஆம் ஆண்டு சில ஆசிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அவற்றின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் அதிக பாதிப்பு இல்லை)

தற்போது நிலைமை, 1991 இல் இருந்ததை விட கடுமையானது தான். ஆனால் இதில் இருந்து மீண்டு வந்துவிட முடியும்.

இதை எதிர் கொள்ள, நிதி, பொருளாதார, அரசு முதலீடு, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் உட்பட எல்லாவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

உலக பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதுடன், நிலைமை தெளிவாக இல்லை. இந்த பிரச்சனை இங்கு உருவாகவில்லை, வேறு எங்கேயோ தானே ஏற்பட்டது என்று நமக்கு பாதிப்பு இருக்காது என்று நினைக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன.

அதே நேரத்தில் உலக அளவில் நிலைமை எப்படி இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் எட்டு விழுக்காடு வளர்ச்சி அடைவதற்கான திறனும், திறமையும் நமக்கு இருக்கிறது.

இந்தியாவின் தொழில் துறை தேக்கமடையாமல், தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க உறுதி பூண்டுள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார்.

அவர் பேசி முடித்த பின்பு, கேள்விக்கு பதிலளிக்கையில், மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்து, சென்ற பட்ஜெட்டில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

தற்போதைய சர்வதேச அளவிலான நிதி அமைப்பு மாற்றப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு, மன்மோகன் சிங் பதிலளிக்கையில், இதை பற்றி எதிர்பார்ப்பு மட்டுமே இருக்க முடியும். வாஷிங்டனில் சமீபத்தில் நடந்த ஜீ-20 நாடுகளின் கூட்டம் குறித்து ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். அங்கு நான் பொருளாதார நெருக்கடியின் சுமை ஏழை நாடுகளை பாதிக்காமல் இருக்க வேண்டும். புத்தாயிரம் ஆண்டு மேம்பாட்டு இலக்கை அடைய வளரும் நாடுகளுக்கு தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள நிதி நிறுவனங்கள், அவை நிர்வகிக்கும் விதம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். உலக அளவிலான நிதி நிறுவனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.

உலக நாடுகளின் தலைவர்கள் ஒருங்கினைந்து நடவடிக்கை எடுக்க சம்மதித்து உள்ளனர்.அத்துடன் மீண்டும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் சந்தித்து ஆலோசிக்க சம்மதித்து உள்ளனர். இது பிரச்சனையை தீர்க்க எடுக்கும் துவக்கம் தான் என்று மன்மோகன் சிங் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil