Publish Date: Fri, 21 Nov 2008 (13:49 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (13:48 IST)
தக்கலை (கன்னியாகுமரி) : இந்திய அரிய மணல் ஆலைக்கு, தாது பொருள்கள் ஏற்றுமதி மூலம் ரூ. 60 கோடி அன்னிய செலாவணி கிடைத்துள்ளது என்று அரிய வகை மணல் ஆலைகளின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.சிவ சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், மணவாளக்குறிச்சியில் அரிய மணல் ஆலை உள்ளது. இங்கு இந்திய அரிய மணல் ஆலைகளுக்கு இடையே 3 நாட்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிகளை நேற்று தொடக்கிவைத்து பேசிகையில், இந்திய அரிய மணல் ஆலையிலுள்ள தாது பொருள்கள் மூலம் சென்ற நதி ஆண்டில் (2007/08) ரூ.340 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. இதன் மூலம் ரூ.130 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற அந்நிய நாடுகளுக்கு அரியவகை தாதுவை ஏற்றுமதி செய்ததன் மூலம் ரூ.60 கோடி அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.
இந்திய அரிய மணல் ஆலைகளில் மோனோசைட் அதிக அளவில் பிரித்து எடுக்கப்படுகிறது. இதில் இருந்து பிரித்து எடுக்கும் தோரியம், அணுசக்தி மூலம மின்சாரம் தயாரிப்பதற்கு மூலப் பொருளாக பயன்படுகிறது.
எனவே, வருங்காலத் தேவைகளை கணக்கில் கொண்டு இதை போதுமான அளவில் சேமித்து வைத்துள்ளோம். மணவாளக்குறிச்சி மணல் ஆலையின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.