Publish Date: Thu, 20 Nov 2008 (16:42 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (16:41 IST)
மும்பை: மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி. இதன் யூனிட்டுகளை விற்பனை செய்வதால் உண்டான பிரச்சனைதான். இவை செய்துள்ள முதலீடுகளால் அல்ல என்று “செபி” என்று அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுபாட்டு வாரிய சேர்மன் சி.பி.பாவே தெரிவித்தார்.
மும்பையில் இந்திய-மலேசிய பங்குச் சந்தை அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த செபி சேர்மன் சி.பி.பாவே செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்வதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்வது பற்றி ஆலோசனைகள் வெளியிடுவதற்கு சிறிது கால அவகாசம் தேவை.
இந்தியாவில் அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் விதி முறைகள் முழுவதும் மறு பரிசீலனை செய்ய வேண்டியதுள்ளது. இதை செய்ய சிறிது காலம் பிடிக்கும். அதற்கு பிறகே ஆலோசனைகள் வெளியிடப்படும்.
பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், சார்ட் செல்லிங் என்று அழைக்கப்படும், பங்குகளை கடன் வாங்கி விற்பனை செய்யும் முறைக்கு உடனடியாக தடை விதிக்கப்படாது என்று தெரிவித்த பாவே, தற்போதைய சூழ்நிலையில் அந்நிய முதலீடு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றன என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இது இந்தியாவில் மட்டும் உள்ள நிலைமை அல்ல. மற்ற நாடுகளிலும் இதே பிரச்சனைகள் உள்ளது. அவர்கள் நாட்டில் பிரச்சனை இருக்கும் போது, அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை திரும்ப கொண்டு செல்வது இயற்கையானது தான்.
தற்போதைய சூழ்நிலையிலும், அந்நிய முதலீடு நிறுவனங்கள் பங்குகளை வாங்குகின்றன. ஆனால் அவை வாங்கும் அளவை விட, அதிகமாக விற்பனை செய்கின்றன என்று தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Thu, 20 Nov 2008 (16:42 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (16:41 IST)