Publish Date: Fri, 14 Nov 2008 (10:04 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (10:03 IST)
கோபி: கோபி ஒழுங்குமுறை கூடத்தில் மக்காச் சோளம் விற்பனை தொடங்கியது.
இங்கு முதல் நாள் ஏலத்தில் 139 மூட்டை மக்காச் சோளம் விற்பனையானது.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. நாமக்கல், ஈரோடு மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள ஊர்களில் கோழிப் பண்ணைகள் அதிக அளவு உள்ளன. கோழி தீவனம் தயாரிக்க மக்காச் சோளம் முக்கிய பொருளாக உள்ளது. இது வரை தமிழக்தின் தேவையில் கணிசமான பகுதி மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது.
மக்காச் சோளத்திற்கு நல்ல விற்பபனை வாய்ப்பு உள்ளதால், கோபிச் செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்கின்றனர்.
இதுவரை இவர்கள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்தை வியாபாரிகளிடமோ அல்லது அம்மாபேட்டை மற்றும் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.
விவசாயிகளின் நலன் கருதி, கோபி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் தொடங்கப்பட்டது.
நேற்று இங்கு நடைபெற்ற முதல் நாள் ஏலத்தில் 139 மூட்டை மக்காச் சோளத்தை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். இதன் குறைந்த பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.819, அதிகபட்ச விலையாக ரூ.850 வரை ஏலம் போனது. இதை வியாபாரிகள் வாங்கினார்கள்.