Publish Date: Tue, 11 Nov 2008 (09:25 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
தோஹா: கத்தார் நாட்டிடம் கூடுதலாக 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவை இந்தியா கேட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், கத்தார் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா இன்று கத்தார் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
இவர் கத்தார் நாட்டின் துணை பிரதமரும், எரிசக்தி மற்றும் தொழில் துறை அமைச்சருமான அப்துல்லா பின் அகமத் அல் அதுயாக்காவை (Abdullah bin Hamad al Attiyah) சந்தித்து பேசினார்.
அப்போது முரளி தியோரா, அதுயாக்கோவிடம், இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயு தேவையில், 5 முதல் ஏழரை மில்லியன் டன் வரை பற்றாக்குறை உள்ளது. இதில் பெரும்பகுதியை கத்தார் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, இந்தியாவின் சிறந்த நண்பரான அதுயாக்கோ உடன் நடத்திய ஒரு மணி நேர பேச்சுவார்த்த பயன்மிக்கதாக இருந்தது. இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையை கவனத்தில் கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.
இந்தியா தற்போது 25 வருட ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் நாட்டின் ராஸ்கேஸ்சில் இருந்து வருடத்திற்கு 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவை வாங்குகிறது. இவை 1 மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் அளவு படி 2.53 டாலர் விலையில் வாங்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் 1 மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை 20 டாலராக உள்ளது.
இந்தியா 25 வருட ஒப்பந்தத்தின் கீழ், மிக குறைந்த விலையில், கத்தார் நாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவை வாங்கி வருகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், பழைய ஒப்பந்தப்படி வழங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றன.
ஆனால் கத்தார், இந்த மாதிரி கோரிக்கையை எழுப்பாததுடன், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தபோல் மின் உற்பத்தி நிலையத்திற்காக, குறுகிய கால உதவியாக கூடுதலாக 1.5 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவை வழங்கி உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Tue, 11 Nov 2008 (09:25 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)