Publish Date: Sat, 08 Nov 2008 (12:06 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (12:04 IST)
மும்பை: இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்கள் தெரிய ஆரம்பித்தன.
உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றன. அமெரிக்காவில் வங்கி, நிதி நிறுவனங்கள் திவாலானது. அதே தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளும் நெருக்கடிக்கு உள்ளானது.
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம், எஸ்.எல்.ஆர் விகிதங்களை அதிகரித்தது.
இதனால் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். விலை உயர்வை கட்டுப்படுத்தவும், இதன் விளைவாக உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற கருத்தும் கூறப்பட்டது.
தற்போது வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் பணப்புழக்கத்தையும், வட்டியை குறைப்பதற்கு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் உற்பத்தி பொருட்களின் விற்பனை பாதிப்பால், பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களான டாடா மோட்டார், அசோக் லேலண்ட் ஆகியவை உற்பத்தியை குறைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இதற்காக வாரத்தில் சில தினங்கள் விடுமுறை விடும் முடிவை எடுத்துள்ளன.
டாடா மோட்டார் நிறுவனத்திற்கு பூனாவில் உள்ள
வாகன உற்பத்தி தொழிற்சாலையில், இந்த மாதம் ஆறு மாதம் உற்பத்தியை நிறுத்தி, விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதே போல் இதன் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையிலும் மூன்று நாட்கள் உற்பத்தி நிறுத்தம், விடுமுறை மேற்கொள்ளப்படும்.
மற்றொரு வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட், வாரத்தில் வேலை நாட்களை மூன்று நாட்களாக குறைத்துள்ளது.
வாகன உற்பத்தி, கட்டுமான தொழில் உட்பட பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மூலப் பொருளாக உள்ள உருக்கு தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் உருக்கு, இரும்பு பொருட்களின் உற்பத்தியை 20 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதே போல் எஸ்ஸார் உருக்கு நிறுவனமும் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மாதிரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவைகள் தயாரிக்கும் பொருட்களின் அளவு, எண்ணிக்கையை குறைப்பதற்கு காரணம், விற்பனை பாதிப்புதான்.
இரு சக்கர வாகனங்கள் வாங்குவது முதல் வீடு கட்டுவது வரை குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடனுக்கான வட்டி அதிகரித்துள்ளது அத்துடன் நிதி நெருக்கடியால் கடன் கிடைப்பதும் குறைந்துள்ளதே.
சிமென்ட், ஜவுளி துறையில் உள்ள நூற்பாலை, நெசவு ஆலை, பின்னலாடை, இரசாயண பொருட்கள் உற்பத்தி, செயற்கை இழை உற்பத்தி உட்பட பல்வேறு தொழில்கள் உற்பத்தியை குறைக்க துவங்கியுள்ளன.
ரியல் எஸ்டேட், வீடு, அலுவலம் போன்ற கட்டுமான தொழில்கள் மந்தகதியில் நடைபெறுகிறது.
இயற்கை ரப்பர் விலை உயர்வு, சீனாவின் இறக்குமதி போன்றவைகளால், டயர் தொழிற்சாலைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன. இத்துடன் இப்போது வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதால் டயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் மேலும் பாதிக்கப்படும்.
இது போன்று பல்வேறு பிரிவுகளில் உற்பத்தியில் மட்டுமல்லாது, சேவை துறை, போக்குவரத்து தொழில்களும் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
Webdunia
Publish Date: Sat, 08 Nov 2008 (12:06 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (12:04 IST)