Publish Date: Sat, 08 Nov 2008 (13:55 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (13:54 IST)
புது டெல்லி: பெண்களுக்கான சிறப்பு காப்பீடு திட்டமான ஜீவன் பாரதி திட்டத்தின் கீழ், மூன்றே மாதங்களில் 15 ஆயிரம் பெண்கள் காப்பீடு செய்து கொண்டுள்ளனர்.
எல்.ஐ.சி என்று அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீடு கழகம், முதன் முதலில் 2003 ஆம் ஆண்டில் பெண்களுக்கு மட்டுமே காப்பீடு வசதி அளிக்க ஜீவன் பாரதி என்ற பெயரில் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்திற்கு பதிலாக, பல சிறப்பு வசதிகளுடன், கடந்த ஜூலை மாதத்தில் ஜீவன் பாரதி-1 என்ற பெயரில் காப்பீடு திட்த்தை அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய ஜீவன் பாரதி-1 திட்டத்தில், காப்பீடு செய்து கொள்வதற்காக செலுத்தும் தொகையும், இலாபத்துடன் திரும்ப கிடைக்கும். அத்துடன் விபத்து, உடல் ஊனம் போன்ற பாதிப்புகளுக்கு, காப்பீடு செய்து கொண்ட பெண்களுக்கு, குழந்தை ஊனத்துடன் பிறந்தால், இழப்பீடு தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் காப்பீடு செய்து கொள்ளலாம். பதினைந்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்
குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
இந்த காப்பீடு திட்டத்தில் சேரும் பெண்கள், வருடத்திற்கு ஒரு முறை காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தவணை முறையில் செலுத்த விரும்பினால், அடுத்த வருடத்திற்கான கட்டணத்தை மூன்று தவணைகளில் செலுத்தலாம்.
இவ்வாறு முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சலுகையும் வழங்கப்படும்.
முதல் இரண்டு வருடங்கள், காப்பீடு கட்டணம் செலுத்தி, பிறகு செலுத்தாவிட்டாலும் கூட, அடுத்த மூன்று வருடங்களுக்கு காப்பீடு தொடரும். அசம்பாவிதம் ஏற்பட்டால் இழப்பீடு தொகை வழங்கப்படும்.