Publish Date: Sat, 01 Nov 2008 (15:39 IST)
Updated Date: Sat, 01 Nov 2008 (15:38 IST)
மும்பை: ரிசர்வ் வங்கி இன்று ரிபோ வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது. அதோ போல் வங்கிகள் அவைகளின் மொத்த வைப்பு நிதியில் இருந்து ரிசர்வ் வங்கியில் வைக்கவேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை 1 விழுக்காடு குறைத்துள்ளது.
இதே போல் எஸ்.எல். ஆர் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில், வங்கிகள் ரொக்கம், தங்கம் அல்லுது அரசு கடன் பத்திரங்களை இருப்பாக வைப்பதை ஏற்கனவே தற்காலிகமாக 1% குறைத்தது. இதை தற்போது நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையினால், நிதி சந்தையில் பணப்புழக்கம் ரூ.85 ஆயிரம் கோடி அதிகரிக்கும்.
முன்பு வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் 8% ஆக இருந்தது. இது தற்போது 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரிபோ என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கம் குறுகிய கால கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை இரண்டரை விழுக்காடு குறைத்துள்ளது.
இன்று குறைத்துள்ளதையும் சேர்த்து, ரிசர்வ் வங்கி ரூ.2,70,000 கோடி பணப்புழக்கம் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி குறையும். இதே போல் வைப்பு தொகைக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டியும் குறையும்.
( பஞ்சாப் நேஷனல் வங்கி நேற்று கடனுக்கான வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது)
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உட்பட, பல்வேறு பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும். அத்துடன் தேக்கமடைந்துள்ள தொழில் துறை உற்பத்தியும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Sat, 01 Nov 2008 (15:39 IST)
Updated Date: Sat, 01 Nov 2008 (15:38 IST)