Publish Date: Fri, 31 Oct 2008 (12:54 IST)
Updated Date: Fri, 31 Oct 2008 (12:53 IST)
சென்னை : தமிழ்நாட்டில் 8 லட்சம் டன் அயோடின் கலந்த உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் தேவை போக எஞ்சியுள்ளவை கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் அயோடின் கலந்து உப்பு தாயரிப்பு பற்றி, சென்னை மண்டல துணை உப்பு ஆணையர் டாக்டர் ஜெய்பால் சிங் கூறுகையில், தமிழகத்தில் உப்பில் அயோடின் கலந்து அயோடின் உப்பு தயாரிக்கும் 78 தொழிற்சாலைகள் உள்ளன(21 சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட).இவைகளில் இருந்து 15 லட்சம் டன் அயோடின் உப்பு உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினார்.
சென்னையில் சமீபத்தில் உப்பு ஆணையரகம், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து அயோடின் சத்து குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
இதில் உரையாற்றிய பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்துகள் துறையின் இயக்குனர் டாக்டர் எஸ் இளங்கோ, அயோடின் சத்து குறைபாட்டால் வளர்ச்சி குறைவு, மனவளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுவதாகவும், அயோடின் சத்து குறைபாட்டை உடனடியாக தடுக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
யுனிசெப் நிறுவனத்தின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து அலுவலர் டாக்டர் டி பி ஜெயந்தி உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டு அயோடின் சத்து குறைபாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் எஸ் நாராயணசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் திரு சி சமயமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளும், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் பங்கேற்றனர்.