Publish Date: Wed, 29 Oct 2008 (15:46 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (15:46 IST)
புது டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், செபி சேர்மன் சி.பி.பாவே, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராகேஷ் மோகன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரெங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தற்போதைய பொருளாதார நிலை, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு மத்திய அரசின் தலைமைச் செயலளகத்தில் நிதி அமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக்கில் நடைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக் கிழமை ரிசர்வ் வங்கி பொருளாதார ஆய்வறிக்கை, கடன் கொள்கையை வெளியிட்டது.
அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க, ரிசர்வ் வங்கி வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைகளும், வழக்கத்திற்கு மாறாக எடுக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கும் என்று கூறியிருந்தார்.
அத்துடன் பணப்புழக்கத்தை அதிகரிக்க தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கி அதிக பணத்தை வங்கிகள், நிதிச் சந்தையில் கிடைக்க செய்யும் என்று கூறியிருந்தார்.
இந்த மாதம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான கையிருப்பு விகிதம், வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நிதிச் சந்தையில் ரூ.1,85,000 கோடி பணப்புழக்கம் அதிகரிகச் செய்தது.
அதே நேரத்தில் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, நிறுவனங்களைத் துவக்கிய உரிமையாளர்கள், அந்த நிறுவனங்களில் மொத்த பங்குகளில் 75 விழுக்காடு வரை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது. பங்குச் சந்தைகளில் பல நிறுவனங்களின் பங்கு விலைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில், நிறுவன உரிமையாளர்கள் பங்குகளை அதிகரித்துக் கொள்ள செபி அனுமதி அளித்தது.
இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், வெளியே வந்த சி.ரங்காரஜன் கூறுகையில், உலக அளவிலான பொருளாதார நெருக்கடி, இதனால் இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
அத்துடன் வாஷிங்டனில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி உலக நிதி சந்தை மற்றும் பொருளாதார நிலை பற்றி விவாதிக்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா எடுக்க வேண்டிய நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
நிதி அமைச்சர் சிதம்பரம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில், 13 வது ஊதிய குழு தலைவர் விஜய் கல்கர், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான், நிதித் துறை செயலாளர் அருன் ராமநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான அசோக் சாவ்லா மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Webdunia
Publish Date: Wed, 29 Oct 2008 (15:46 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (15:46 IST)