Publish Date: Wed, 22 Oct 2008 (13:35 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (13:34 IST)
டோக்கியோ: உலக அளவில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவினாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடு வரை இருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் ஜப்பான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதை ஒட்டி ஜப்பானின் முன்னணி செய்திப்பத்திரிக்கையான “அஸ்ஹாகி“க்கு (Ashahi ) பேட்டி அளித்துள்ளார்.
அப்போது மன்மோகன் சிங், உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவையும் சிறதளவு பாதிக்கும். இருப்பினும் இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 7.5 விழுக்காடு முதல் 8 விழுக்காடு வரை இருக்கும்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்தியா சிறதளவே பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டு வங்கிகள் வலிமையாக உள்ளன என்று கூறினார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும், சர்வதேச நிதியத்தில் (International Monetary Fund) சிர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற ஜப்பானின் ஆலோசனை பற்றி குறிப்பிட்ட மன்மோகன் சிங், சர்வதேச நிதியத்தில் சீர்திருத்தம் தேவை எனில், அதற்கு இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது என்று கூறினார்.
இந்தியாவுக்கும்-ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் [Comprehensive Economic Partnership Agreement (ECPA),] குறித்த கேள்விக்கு மன்மோகன்சிங் பதிலளிக்கையில், இரண்டு தரப்பிலும் கருத்து வேறுபாடு உள்ளது. தற்போதைய தனது சுற்றுப்பயணத்தின் போது ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை “அஸ்ஹாகி“க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மற்றொரு முன்னணி ஜப்பானிய தினசரி யமிரி சிம்பன் (Yomiuri Shimbon), இரு நாடுகளுக்கும் இடையே, இந்த வருட இறுதிக்குள் பொருளாதார ஒப்பந்தம் ஏற்படும் என்று மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்ததாக கூறியுள்ளது.
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை 2007, ஜனவரி மாதம் துவங்கியது. இது வரை இரண்டு நாடுகளுக்கு இடையை பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளை, ஜப்பான் அங்கீகரிப்பதற்கான விதி முறைகளை எளிமைப்படுத்துவதில் கருத்து உடன்பாடு ஏற்படவில்லை.
ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று ஜப்பான் கூறி வருகிறது.