Publish Date: Thu, 16 Oct 2008 (14:02 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
மும்பை: நிதி சந்தையில் ரூ.65,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நேற்று சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இதன்படி ரிசர்வ் வங்கியில், வங்கிகளின் இருப்பு விகிதம் 1 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி கிடைக்கும். ரிசர்வ் வங்கி சென்ற வாரம் வங்கிகளின் இருப்பு விகிதத்தை இரண்டு தவணைகளில் ஒன்றரை விழுக்காடு குறைத்தது நினைவிருக்கலாம்.
இதையும் சேர்த்து வங்கிகளுக்கு, கடன் கொடுப்பதற்கும், அதன் நிதி தொடர்பான நடவடிக்கைகளுக்கும் மொத்தம் 1 லட்சம் கோடி கிடைக்கும்.
அத்துடன் விவசாய கடன் தள்ளுபடிக்கு செய்த தொகைக்கு ஈடுசெய்ய, மத்திய அரசு வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது.
இதில் வங்கிகளுக்கு ரூ.7,500 கோடியும், நபார்ட் வங்கிக்கு ரூ.17,500 கோடி வழங்கப்படும்.
விவசாய கடன் தள்ளுபடிக்கு ஏற்கனவே ரூ.10 ஆயிரம் கோடிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு வருகின்ற கூட்டத்தொடரில் மேலும் ரூ.25 ஆயிரம் கோடி ஒப்புதல் வாங்கும்.
அத்துடன் அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை தடுக்க, அந்நியச் செலவாணி பெறும் வகையில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி முன்பு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நிறுவன பத்திரங்களில் அதிகபட்சமாக 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 6 பில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வங்கிகள் அந்நிய நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிக்கான வட்டியையும் உயர்த்த அனுமதித்துள்ளது.
தற்போது இந்த வைப்பு நிதிக்கு லிபார் வட்டியை விட, (லண்டன் இன்டர் பாங்க்) கூடுதலாக அரை விழுக்காடு வட்டி வழங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதை தற்போது 1 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.
இதே போல் இந்திய வங்கிகள், அதன் அந்நிய நாட்டு கிளைகளில் இருந்து கடனாக பெறும் அளவையும் உயர்த்தியுள்ளது.
Webdunia
Publish Date: Thu, 16 Oct 2008 (14:02 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)