Publish Date: Thu, 16 Oct 2008 (14:40 IST)
Updated Date: Thu, 16 Oct 2008 (14:39 IST)
புது டெல்லி: இந்திய உணவு கழகம் 8.4 லட்சம் டன் கோதுமையை மாவு ஆலைகளுக்கு விற்பனை செய்ய உள்ளது.
கோதுமை மாவு, ரவை, மைதா மாவு போன்றவற்றை தயாரிக்கும் மாவு ஆலைகள் (பிளவர்ஸ் மில்) மற்ற நேரடி உபயோகிப்பாளர்களுக்காக எட்டு லட்சத்து 40 ஆயிரம் டன் கோதுமையை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.
இதற்கான விலைப்புள்ளிகளுக்கான அறிவிப்பை விரைவில், இந்திய உணவு கழகம் (Food Corporation of India-FCI) வெளியிடும் என்று தெரிகிறது.
இது குறித்து இதன் உயர் அதிகாரி கூறுகையில், கோதுமை விற்பனை செய்வதற்கான விலைப்புள்ளி அறிவிப்பு பிராந்திய அலுவலகங்களில் வெளியிடப்படும்.
இதற்கான விண்ணப்பம் வந்த பிறகு, இந்திய உணவு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அலோக் சின்கா தலைமையில் உள்ள உயர்மட்ட குழு, கோதுமையின் விலையை முடிவு செய்யும்.
தற்போது விற்பனை செய்யப்பட உள்ள கோதுமையின் குறைந்தபட்ச விலை மகாராஷ்டிரா மாநிலத்தில் குவின்டாலுக்கு ரூ.1,121 எனவும், கேரளாவில் ரூ.1,185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஆந்திராவிற்கு ரூ.1,136, பிகாரில் ரூ.1.090, டெல்லியில் ரூ.1.027, குஜராத் மாநிலத்திற்கு ரூ.1,088, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு ரூ.1,021, உத்தர பிரதேசத்திற்கு ரூ.1,055 என நிர்ணிக்கப்பட்டுள்ளது.
கோதுமையை வாங்க விரும்புபவர்கள், இந்த விலையை விட, அதிக விலைக்கு விலைப்புள்ளி அனுப்பாலாம்.
இந்திய உணவு கழகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 75 ஆயிரம் டன், கேரளாவில் 60 ஆயிரம் டன், ஆந்திரா, தமிழ்நாடு,கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 50 ஆயிரம் டன் கோதுமை விற்பனை செய்ய உள்ளது.
இதில் மாவு ஆலைகளுக்கு, பீகார், குஜராத், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆதிய மாநிலங்களில் தலா 40 ஆயிரம் டன் கோதுமை விற்பனை செய்யப்படும். மற்ற மாநிலங்களில் மாவு ஆலைகளுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டன் கோதுமை விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.