Publish Date: Fri, 10 Oct 2008 (12:09 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
புது டெல்லி: வங்கிகளில் பணப்புழக்கம் குறைவால், வங்கிகள் கடன் கொடுப்பது குறைந்துள்ளது. பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சென்செக்ஸ் 799 புள்ளிகளும், நிஃப்டி 216 புள்ளிகளும் குறைந்தன. சென்ற புதன் கிழமையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சரிவை தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய சிதம்பரம், இதற்கு முக்கிய காரணம் வங்கிகளில் பணப்புழக்கம் குறைந்தது தான் என்று தெரிவித்தார்.
அத்துடன் ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை ஒரு விழுக்காடு குறைத்துள்ளது. மத்திய நிதி துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை குழு நிலைமையை ஆராய்ந்து வருகிறது என்று சிதம்பரம் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி சென்ற வாரம் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது. இது நாளை முத்ல அமலுக்கு வருகிறது. இதனால் நாளை வங்கிகளில் பணப்புழக்கம் ரூ,20 ஆயிரம் அதிகரிக்கும்.