Publish Date: Thu, 09 Oct 2008 (16:47 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (16:46 IST)
புது டெல்லி: இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றான தபார் பல்கலைக் கழகம் (Thapar University) வர்த்தக ரீதியாக வேம்பு பூச்சி மருந்து தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.
இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள தொழிலகத்திலேயே, வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.
இந்த பல்கலைக் கழகமும், பஞ்சாப் மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப குழுவும் இணைந்து வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இங்கு முதலில் மணிக்கு 50 கிலோ வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நான்கு டன் வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.
இதற்கு தேவையான வேப்ப இலை, வேப்பங் கொட்டை ஆகியவைகளுக்கா வேப்ப மரம் வளர்க்கப்படும். இந்த வேப்ப மரங்கள் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் வளர்க்கப்படும். இதிலிருந்து பூச்சி மருந்து தயாரிக்க தேவையான வேப்பங் கொட்டை பெறப்படும்.
இது குறித்து தபார் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அரிஜித் முகர்ஜி கூறுகையில், எங்களுக்கு இயற்கை பூச்சி மருந்துகளின் தேவை அதிக அளவு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தயாரிக்க சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.
ரசாயண உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் செய்யும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் இயற்கை உரம், பூச்சி மருந்துகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. எவ்வித தீங்கும் இல்லாதது.
இவ்வகை பூச்சி மருந்துகள் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. இவை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நிலத்தடி நீர், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்று டாக்டர் அரிஜித் முகர்ஜி தெரிவித்தார்.
இதன் எதிர்கால திட்டம் பற்றி டாக்டர் அரிஜித் முக்ரஜி கூறுகையில், இந்த பூச்சி மருந்து தயாரிப்பதன் மூலம், இதை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப்பில் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத விவசாயம் மேற்கொள்ளப்படும்.
இந்த வருடம் ஜீலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் 22 டன் வேப்பங் கொட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்த பூச்சி மருந்து தயாரிக்கப்பட்ட பிறகு, பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் கூட்டம் நடத்தப்படும். இதில் பல்கலைக் கழக ஊழியர்கள், ரசாயண உரத்தை பயன்படுத்துவதால் நிலத்தடி நீர், மண் வளம், உணவு தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்குவார்கள்.
இவர்களுக்கு இயற்கை பூச்சி மருந்து பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். இதே போல் பல்கலைக் கழகத்திலும் விவசாயிகளின் கூட்டங்கள் நடத்தி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Thu, 09 Oct 2008 (16:47 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (16:46 IST)