ஈரோட்டில் ரூ.120 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
Publish Date: Tue, 07 Oct 2008 (15:22 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (15:22 IST)
ஈரோட்டில் ரூ.120 கோடி செலவில் உயர்தொழில்நுட்ப நெசவு பூங்கா அடுத்த மாதம் பணி துவங்க உள்ளது.
தமிழகத்தில் ஈரோடு மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் திவாண்டி உட்பட நாட்டில் ஏழு இடங்களில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க மத்திய ஜவுளித்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு அருகே உள்ள பெருந்துறை பவானி தேசிய நெடுஞ்சாலையில் திருவாச்சி பகுதியில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னால் 40 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டது.
இந்த நிலத்தில் உயர்தொழில்நுட்ப நெசவு பூங்காவிற்கு தேவையான அனைத்தும் சர்வதேச அளவில் வடிவமைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த பூங்காவில் தொழில் தொடங்குவோருக்கு மின்கட்டண சலுகை வழங்குவதுடன் 40 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. ரூ.118 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்குவதாக ஈரோடு உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா நிர்வாக இயக்குனர் மாரப்பன் கூறினார்.