Publish Date: Mon, 06 Oct 2008 (13:25 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
விரைவில் பயிர்க் காப்பீட்டு நிவாரணம்!
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு (2007-08) காப்பீடு செய்து கொண்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பு தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டு (2008-2009) தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய அனைத்து வட்டாரங்களிலும் பிர்கா மற்றும் சாகுபடி பயிர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்ட விவரங்களை அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.
அனைத்து சிறு, குறு விவசாயிகள், பெரு விவசாயிகள், குத்தகைதாரர்கள், கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெறாதவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம்.
தொடங்கியுள்ள சம்பா மற்றும் தாளடி நெல்பயிருக்கு கடன்பெறும் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் மாத இறுதி வரை பயிர்க் காப்பீடு செய்து கொள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பா, தாளடி நெல்பயிர்களுக்கு காப்பீடுத் தொகைக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 2 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது. கடன் பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடு செய்ய நிதியுதவி பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 06 Oct 2008 (13:25 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)