Publish Date: Tue, 30 Sep 2008 (13:32 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (13:31 IST)
இந்திய பங்குச் சந்தையில் நெருக்கடி இல்லை. எனவே முதலீட்டாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று செபி தலைவர் சி.பி.பாவே (C B Bhave) கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்திய பங்குச் சந்தை கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று சென்செக்ஸ் 13 ஆயிரத்திற்கும் குறைந்தது.
இந்நிலையில் இன்று பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவர் பாவே கூறுகையில், இந்திய பங்குச் சந்தையில் நெருக்கடி இல்லை. நாங்கள் பங்குச் சந்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டவுடன், இந்தியா மீண்டும் வலிமை உடையதாக மாறும்.
பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விதிகளை மீறுபவர்கள் மீது, செபி கடுமையான நடவடிக்கை எடுக்கும். முதலீட்டு நிறுவனங்கள் குறுகிய காலத்தில் பங்குகளை விற்பனை செய்வதை பற்றி கவலை கொள்ளவில்லை. இந்த விதிகளை மாற்றும் திட்டமும் இல்லை.
பங்குச் சந்தையை கண்காணிக்கும் முறை ஏற்கனவே உள்ளது. இதை பற்றி அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.
மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளுடன், செபி தலைவர் பாவே ஆலோசனை நடத்தி வருகிறார்.
Webdunia
Publish Date: Tue, 30 Sep 2008 (13:32 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (13:31 IST)