Publish Date: Wed, 24 Sep 2008 (20:38 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (20:37 IST)
கொச்சி துறைமுகத்தில் சரக்கு பெட்டகத்தை கொண்டு செல்லும் டிரைலர் வாகன ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு பெட்டகம் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கொச்சி துறைமுகத்தில் இருந்து வெளியேயும், மற்ற இடங்களில் இருந்து சரக்கு பெட்டகங்கள் டிரைலர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.
இதன் ஓட்டுநர், ஊழியரை மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் தாக்கிதாக கூறி, ஓட்டுநர்கள் திங்கட் கிழமை இரவு முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் சரக்கு பெட்டகம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு பெட்டக முனையத்தின் வெளியே கப்பலில் ஏற்றுவதற்காக கொண்டு வந்த சுமார் 300 சரக்கு பெட்டகங்கள், துறைமுகத்திற்கு உள்ளே கொண்டுவர முடியாமல் உள்ளன.
இந்த பிரச்சனையில் முடிவு காண்பதற்காக, கொச்சி மாவட்ட தொழிலாளர் துறை ஆணையர், இன்று இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இந்நிலையில் தங்கள் சகாவை தாக்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று டிரைலர் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
கொச்சி துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை ஏற்றி, இறக்குவதில் காலதாமதம் ஆகின்றது என்று கூறி, கடந்த மாதம் டிரைலர் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.