Publish Date: Wed, 24 Sep 2008 (17:40 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (17:40 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராஜ்காட் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் நடந்த விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்பு நியாயமாக நடக்கவில்லை என்று முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் கூறியுள்ளது.
ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு, நிலத்தை வழங்க சம்மதிக்கின்றார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களா என்பதை அறிய கடந்த திங்கட் கிழமை “விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்பு” நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பு நியாயமாக நடக்கவில்லை என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் நிறுவன விவகாரங்கள் பிரிவுத் தலைவர் பரிமால் நத்வாணி (Parimal Nathwani) கூறியுள்ளார்.
என்.டி.டி.வி.யின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பரிமால் நத்வாணி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்திற்கு எதிராக வாக்கெடுப்பு முடிவு வந்தால், நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். முதலில் மாநில அரசு தேர்தலில் பயன்படுத்துவது போல் வாக்குச் சீட்டில் வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்தது. சிலர் விவசாயிகள் என்ற பெயரில் வாக்குச் சீட்டில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த பகுதியின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும், சில சுயநலவாதிகள் தடுக்க பார்க்கின்றனர். இவர்கள் எப்போதும் மிரட்டி காரியம் சாதிக்கப் பார்க்கின்றனர் என்று கூறினார்.
அதே நேரத்தில் மிரட்டி காரியம் சாதிப்பவர்களின் பெயரை தெரிவிக்கவில்லை. அவர் மேலும் பேசும் போது, ரிலையன்ஸ் நிறுவனம் மாநில அரசு மீது குறை கூறவில்லை. ஆனால் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.
தங்களின் விளை நிலங்களை கொடுக்க சம்மதமா, இல்லையா என திங்கட் கிழமை விவசாயிகள் மத்தியில் நடந்த வாக்கெடுப்பில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர்.
மத்திய வர்த்தக அமைச்சகம், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, விவசாயிகளிடம் இருந்து நிர்ப்பந்தமாக நிலம் கையகப்படுத்தினால், மத்திய அரசு அனுமதி வழங்காது என்று அறிவித்துள்ளது.
ராஜ்கட் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் என்.டி.பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்றுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
இந்த எதிர்ப்பால் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், கடந்த ஜீலை மாதம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை கையக்கபடுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தார்
அத்துடன் அரசு 22 கிராமங்களிலும் உள்ள விவசாயிகளிடமும், விருப்பத்தை தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று, போராட்டம் நடத்திய என்.டீ. பாட்டீல் இடம் உறுதியளித்திருந்தார்.
இதன்படி கடந்த திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடந்தது.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஆரம்பம் முதல் என்.டி.படேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவர் இதற்காக விவசாயிகளை திரட்டி போராட்டங்களும் நடத்தியுள்ளார்.
விவசாயிகளிடம் நடந்த வாக்கெடுப்பு பற்றி கூறுகையில், 22 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்த்து வாக்களித்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த வாக்கெடுப்பு பற்றிய முடிவு, மாநில அரசு அடுத்த பதினைந்து தினங்களில் அறிவிக்கலாம். அதே நேரத்தில் இதன் முடிவுகள் பற்றி சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரும்பவில்லை. பெரிய தொழில் நிறுவனங்களும், மாநில அரசும் கொடுக்கும் பணத்தால், விவசாயிகளின் கருத்து மாறப்போவதில்லை என்று தெரிவித்தார்.
மாநில அரச தொழில் துறையின் உயர் அதிகாரி கூறுகையில், இந்த வாக்கெடுப்பு சிறப்பு பொருளாதாகர மண்டலத்திற்கு எதிராக இருந்தால், இதே போன்ற மற்ற பெரிய அளவிலான திட்டங்களும் பாதிக்கப்படும் என்று கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 24 Sep 2008 (17:40 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (17:40 IST)