Publish Date: Tue, 23 Sep 2008 (13:16 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (13:15 IST)
தமிழ்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது என்று தமிழ்நாடு உணவு தானிய வியாபாரிகள் சங்கம் விளக்கியுள்ளது.
சர்க்கரை விலை உயர்வை குறைக்க மத்திய அரசு மாதந்தோறும் அயல்சந்தை விற்பனைக்கென பல லட்சம் மூட்டைகளை விடுவித்து வருகிறது.
இதை அந்தந்த மாநில அரசு சர்க்கரை இணையங்கள் ஏல முறையில் வணிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. இந்த வெளியீட்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் மாநில அரசுகளும் கொள்முதல் செய்கின்றன. இந்த ஏலம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா வேலை நாட்களிலும் நடைபெறுகிறது. வணிகர்கள் சந்தை நிலவரப்படி தேவைக்கு ஏலம் போட்டாலும் முழுமையாக புறக்கணிப்பு செய்வதையே வழக்கமாக கொள்கின்றனர்.
சர்க்கரை விலை உயர்வை குறைத்திட மத்திய அரசு அறிமுகப்படுத்திய, இந்த திட்டத்தை மாநில அரசு நிர்வாகம் கொச்சைப்படுத்தி வருகிறது. இதனால் சர்க்கரை விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் தனியார் ஆலைகளும் கூட்டணி போட்டுக் கொள்கின்றன.
ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட மூட்டைகளை ஏல முறையில் மாநில அரசு முழு ஒதுக்கீட்டையும் விற்பனை செய்வதில்லை. அந்தந்த மாத ஒதுக்கீட்டை அந்தந்த மாதத்தில் விற்பனை செய்தாக வேண்டும். தவறினால் மீதமுள்ள மூட்டைகளை குடும்ப அட்டைதாரருக்கும், உணவு வங்கீட்டு வினியோகத்திற்கும் வழங்கவேண்டும். தவணை கடப்பு (லேப்ஸ்) செய்யும் ஆலைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இந்த மாத தொடக்கத்தில் ஒருவாரம் முழுவதுமாக 5 ஆயிரம் மூட்டைகளே விற்பனையாகி உள்ளன. ஒரு மூட்டை சர்க்கரை தொடக்கவிலை ரூ.1,900. இதன் பிறகு விலை குறைந்து கடந்த 12ஆம் தேதி நிலவரப்படி ஒரு மூட்டை சர்க்கரை ரூ.1,700. நல்ல விலைக்கு ஏலக் கேள்வி வந்தாலும் அதை புறக்கணிப்பு செய்து சந்தையில் ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலை உயரச் செய்வதிலேயே சர்க்கரை இணையமும் அதன் அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
சர்க்கரை இணையத்தின் இப்படிப்பட்ட அணுகு முறையால் தனியார் ஆலைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சர்க்கரை மூட்டைகளை நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இன்றைய சர்க்கரை இணையத்தின் கையிருப்பு 7 லட்சம் மூட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தை நிலவரப்படி அரசு இணையத்தில் சர்க்கரை கிடைக்காததால் இங்குள்ள சர்க்கரை வணிகர்கள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் விற்பனை செய்கிறார்கள். சர்க்கரை விலை உயர்வுக்கு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையமே பொறுப்பாகும். இந்த அவலங்களை நீக்கிட மத்திய மாநில அரசுகளும், சர்க்கரை இணையமும் முன் வரவேண்டும் என்று தமிழ்நாடு உணவு தானிய வியாபாரிகள் சங்க செயலாளர் சா.சந்திரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 23 Sep 2008 (13:16 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (13:15 IST)