Publish Date: Mon, 22 Sep 2008 (15:38 IST)
Updated Date: Mon, 22 Sep 2008 (15:31 IST)
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை ஒழிப்பு உட்பட ஐந்து முக்கியமான விடயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபை அமைந்துள்ளது. ஐ.நா பொதுச் சபையின் கூட்டம் நாளை துவங்குகிறது.
இதில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை ஒழிப்பு, புத்தாயிரம் ஆண்டு மேம்பாட்டு இலக்கு [(Millennium Development Goals (MGDs)], சூடான் நாட்டில் டார்புர் (Darfur) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரம், பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது உட்பட ஐ.நா.வின் சீர்திருத்தம் ஆகியவை பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டம் இரண்டு வாரங்கள் நடைபெறுகிறது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள், அயல்நாட்டு அமைச்சர்கள், மூத்த தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ். டபிள்யு. புஷ் நாளை உரையாற்றுகின்றார். அப்போது அவர் உலக அளவில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடி குறித்து, அமெரிக்க அரசின் கருத்துக்களை எடுத்துரைப்பார். அத்துடன் அடுத்து வரும் ஆண்டுகளில் ஐ.நா சபையின் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி ஜர்தாரி வருகின்ற 25 ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுகின்றார்.
அதற்கு அடுத்த நாள் பிரதமர் மன்மோகன் சிங் வருகின்ற 26 ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுகின்றார். பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, இந்தியாவுக்கு எதிராக எதாவது புகார் கூறினால். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிப்பார் என்று தெரிகிறது. அத்துடன் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி மன்மோகன் சிங் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
நியூயார்க்கில் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் ஜர்தாரியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். இவர்களின் பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் முக்கிய இடம் பெறும் என்று தெரிகிறது. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங், பல்வேறு நாட்டு தலைவர்களுடனும் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.