Publish Date: Wed, 17 Sep 2008 (12:03 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சட்டத்தின் சலுகைகள் மற்றும் மானியங்கள் குறித்த விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை திருப்பூரில் நடக்க உள்ளது.
மத்திய அரசு 2006 ஆம் ஆண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் சட்டத்தை நிறைவேற்றியது. இதில் இந்த தொழில் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இதில் தேசிய உற்பத்தி போட்டியிடுதல் திட்டம் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்துக்கான சலுகைகள் மற்றும் அரசின் நிதி உதவிகள் குறித்த விளக்கக் கூட்டம் திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில் (சைமா) நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் சென்னை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்கழகத்தின் துணை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் பங்கேற்று, இத்திட்டத்தின் மானியம் மற்றும் பிற சலுகைகள் குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
இக்கூட்டத்தில் திருப்பூர் வர்த்தகர்கள் பங்கேற்று பயனைடய வேண்டும் என்று சைமா தலைவர் மோகன் பி.கந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.