Publish Date: Mon, 15 Sep 2008 (12:51 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (12:49 IST)
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், மின்னணு தொழில் பூங்காவை பெங்களூரைச் சேர்ந்த வேளாங்கண்ணி டெக்னாலஜீஸ் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இது 250 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ. 1,300 கோடி.
வேளாங்கண்ணி டெக்னாவஜீஸ் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் 30 அந்நிய நாட்டு நிறுவனங்களும், மின்னணு தொழில் பூங்காவில் உற்பத்தி கூடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பூங்காவின் முதல் பகுதி கட்டுமானப் பணிகள் அக்டோபர் மாதம் தயாராகிவிடும். பின்னர் இங்கு தொழிற் கூடத்தை அமைக்கும் நிறுவனங்கள், பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும். இவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மின்னணு பூங்கா 2012 ஆம் ஆண்டில் முழுமையாக இயங்கு தொடங்கும் என்று தெரிகிறது.
வேளாங்கண்ணி டெக்னாலஜீஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குத் தேவையான பாகங்களைத் தயாரிக்கும்.
இந்த தொழில் பூங்கா தொலைத் தொடர்பு மற்றும் மின்னணு தொழில்நுட்ப பூங்காவாக திகழும்.
இங்கு தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கள் மிக எளிதாக தங்களது ஆலைகளை நிறுவலாம். மின்சாரம், தொலைத் தொடர்பு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு உடனடியாகக் கிடைக்கும். இது தவிர கழிவு நீர் வெளியேற்றம், மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு செய்து தரப்படும்.
அத்துடன்எதிர்காலத் தேவைக்கேற்ப இதை விரிவுபடுத்தவும் தேவையான இடம் உள்ளது என்று இந்திய மின்னணு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ராஜூ கோயல் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 15 Sep 2008 (12:51 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (12:49 IST)