Publish Date: Sat, 13 Sep 2008 (11:43 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (11:42 IST)
மக்காச் சோளத்தின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
மக்காச் சோளத்தின் விலை அதிகரித்ததால், கால்நடை தீவனங்கள் உற்பத்தி செலவு அதிகரித்தது. இதன் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்காச் சோளம் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது நினைவிருக்கலாம்.
புதுடெல்லியில் நேற்று கருத்தரங்கில் கலந்து கொண்ட சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அரசு மக்காச் சோளம் ஏற்றுமதியை நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்த விரும்பவில்லை.
பீகார் வெள்ளத்தால் மக்காச் சோளம் விளைச்சல் பாதிக்கப்படவில்லை எனில், அடுத்த மாதம் ஏற்றுமதி தடையை நீக்கும்.
ஏற்றுமதி தடையால் விவசாயிகள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படுவதை அரசு விரும்பவில்லை. நாங்கள் விவசாயிகளின் நலனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே மக்காச் சோளம் ஏற்றுமதியை நீண்ட நாள் கட்டுப்படுத்த விரும்பவில்லை.
அதே நேரத்தில் பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்ய உள்ள கட்டுப்பாடு தொடரும். சமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்த்தப்பட மாட்டாது என்று சரத் பவார் தெரிவித்தார்.
மக்காச் சோளம் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அத்துடன் விலையும் அதிகரித்ததாக கூறி, கடந்த ஜூலை மாதத்தில் மக்காச் சோள ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அக்கோடர் மாதம் வரை நீடிக்கும் என அரசு அறிவித்தது.
இதே போல் பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்தது.
இந்த மாதம் பாசுமதி அரிசியுடன், பூசா-1121 ரக (சன்ன ரகம்) அரிசியையும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.