Publish Date: Fri, 05 Sep 2008 (20:27 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:11 IST)
எஃகு உற்பத்தியாளர்கள் விலையைக் கட்டுக்குள் வைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசிற்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், சேலம் எஃகு உருக்காலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:
இந்தியாவிலும், உலகெங்கிலும் எஃகு பொருட்களின் விலை அதிகரித்து வருவது குறித்து அரசு கவலைப்படுகிறது. இது உலகளவில் தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கிறது. கல்கரி உள்ளிட்ட கச்சா பொருட்களின் விலையேற்றமும் ஒரு காரணம்.
இருந்தாலும், இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எளிமையாக உற்பத்தியைத் தொடங்கிய நாம், இன்று உலகிலேயே எஃகு உற்பத்தி செய்யும் ஐந்தாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறோம். இப்போதுள்ள நிலவரப்படி, 2015-ல் அதிக அளவில் எஃகு உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாக நாம் உருவெடுப்போம்.
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் நமது பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு ஒன்பது சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியினால் பணவீக்கம் ஏற்படாதிருக்க நாம் உற்பத்தித் திறனையும், உற்பத்தியாகும் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
பணவீக்கமில்லாத வளர்ச்சியை உறுதிசெய்ய அனைத்து துறைகளிலும் நாம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாயம், தொழிற்சாலை உற்பத்தி, சேவைகள் பிரிவு என அனைத்திலும் இந்நடவடிக்கை அவசியம்.
இதர மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது தனிநபர் எஃகு நுகர்வு அளவு மிகவும் குறைவாக உள்ளது. எனினும், நாம் எஃகு விற்பனையாளர் சந்தையில் தொடர்ந்து இருப்போம்.
இவ்வாறு பிரதமர் வலியுறுத்தினார்.