Publish Date: Mon, 25 Aug 2008 (18:09 IST)
Updated Date: Mon, 25 Aug 2008 (18:09 IST)
விசைத்தறி நெசவாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பாதிக்கப்படாது என்று கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகள் செயல்படும் விதம் குறித்து இன்று கைத்தறித் துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனரகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, தமிழகத்திலுள்ள 18 கூட்டுறவு நூற்பாலைகளில் செயல்படாத நிலையில் உள்ள 13 கூட்டுறவு நூற்பாலைகளின் தற்போதைய நிலை குறித்தும், இயங்காத நூற்பாலைகளில் எந்தெந்த நூற்பாலைகளை இயக்க முடியும் என்ற சாத்திய கூறுகள் குறித்தும் அமைச்சரால் பரிசீலிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 2009ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்திற்குத் தேவையான வேட்டி சேலைகள் உற்பத்தி முன்னேற்றம் குறித்தும் அமைச்சரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்திற்குத் தேவைப்படும் 159.44 லட்சம் சேலைகள் மற்றும் 158.80 வேட்டிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி 15.12.2008-க்குள் உற்பத்தி செய்து முடித்து 31.12.2008-க்குள் வருவாய்த் துறையிடம் வழங்கப்பட்டுவிடும் என்றும், இவை 1.1.2009 முதல் மாவட்ட ஆட்சியர்களால் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும், தற்போது 62.74 லட்சம் சேலைகளும், 58.21 லட்சம் வேட்டிகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த 16.08.2008 முதல் விசைத்தறி நெசவாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக இலவச வேட்டி சேலை உற்பத்தி பாதிப்படையாத வண்ணம் இலவச வேட்டி சேலைத் திட்டத்திற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகள் உற்பத்தியினை வரும் 15.12.2008-க்குள் திட்டமிட்டபடி முடிக்க தக்க நடவடிக்கைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Mon, 25 Aug 2008 (18:09 IST)
Updated Date: Mon, 25 Aug 2008 (18:09 IST)