Publish Date: Sat, 23 Aug 2008 (14:10 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (14:09 IST)
நானோ கார் தொழிற்சாலை அமைக்கப்படும் சீங்கூரில் பதட்ட நிலை நீடித்தால், கார் தொழிற்சாலை பணிகளை நிறுத்த போவதாக ரத்தன் டாடா எச்சரித்தார்.
உலகத்திலேயே குறைந்த விலையில் ரூ. 1 லட்சத்தில் கார் தயாரிக்க டாடா மோட்டார் திட்டமிட்டுள்ளது. நானோ என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் தொழிற்சாலை மேற்கு வங்க மாநிலம் சீங்கூரில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து 400 ஏக்கர் நிலம் நிர்ப்பந்தமாக கையகப்படுத்தப்பட்டது. இதை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. நாளை மறுதினம் முதல் விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக எச்சரித்துள்ளது.
டாடா தேயிலை நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்துள்ள டாடா மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா, நேற்று மேற்கு வங்க தொழில் துறை அமைச்சர் நிருபம் சென்னை சந்தித்து பேசினார்.
இன்று செய்தியாளர்களிடம் ரத்தன் டாடா பேசுகையில், சீங்கூரில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து கவலை கொண்டுள்ளோம். இதனால் எங்கள் ஊழியர்கள், இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் முதலீடு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் சிறந்த தொழில் நிறுவனமா, எங்கள் தொழிற்சாலை இங்கு தேவையா இல்லையா என்பதை கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இங்கு தொழிற்சாலை அமைய வேண்டும் என்று விரும்பினால் நல்லது. இது வரை இந்த தொழிற்சாலைக்கு செய்த முதலீடு பற்றி கவலைப்படாமல் வெளியேறி விடுவோம் என்று ரத்தன் டாடா கூறினார்.
Webdunia
Publish Date: Sat, 23 Aug 2008 (14:10 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (14:09 IST)