Publish Date: Tue, 19 Aug 2008 (14:00 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
இணையம் மூலம் தொலைபேசி தொடர்பு இணைப்பு கொடுப்பதற்கு டிராய் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் உள்ளூர் எஸ்.டி.டி. கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள், இன்டர்நெட் இணைப்பு வழியாக உள்நாட்டு நீண்ட தூர தொலைபேசி (எஸ்.டி.டி) இணைப்பு வழங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த தடையை நீக்கப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு துறை கட்டுப்படுத்தும் அமைப்பான, தொலைதொடர்பு ஒழுங்குமுறை வாரியம் (Telecom Regulatory Authority of India - TRAI) இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள், இணையம் மூலமாக உள்நாட்டு நீண்ட தூர அழைப்புக்கான இணைப்புகளையும் வழங்க அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இணைப்பு வழங்குவதால், தொலைபேசியில் பேசுபவர்கள் குறைந்த செலவில் பேச முடியும். இதனால் இந்திய தொலைத் தொடர்பு உலக அளவில் வளர்ச்சி பெறும். தற்போது சட்டத்திற்கு புறம்பாக இணையத்தை பயன்படுத்தி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த அனுமதி வழங்கப்படுவதால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்படும்.
இப்போது உள்நாட்டு நீண்டதூர தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்திடம் கூட்டு சேர்ந்து நீண்ட தூர தொலைபேசி சேவையை வழங்கலாம்.
இனி இணைய இணைப்பு உள்ள கனிணியில் இருந்து சாதாரண தொலேபேசிக்கும், செல் போனுக்கும் பேச முடியும். இதனால் இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.