Publish Date: Thu, 14 Aug 2008 (16:28 IST)
Updated Date: Thu, 14 Aug 2008 (16:28 IST)
தனியார் நிறுவனங்கள் அரிசி கொள்முதல் செய்த அளவுக்கும், அவை ஏற்றுமதி செய்த அளவுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. இவைகள் அரிசியை விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துள்ளனர். இதனால் வெளிச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கிறது.
தனியார் நிறுவனங்கள் அரிசி கொள்முதல் செய்தால், மத்திய விவசாய அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த விதிகளின்படி 10 முதல் 12 நிறுவனங்கள் மட்டுமே அரிசி கொள்முதல் செய்துள்ளதை அறிவித்துள்ளன என்று தெரிகிறது. இவை மொத்தம் 11 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளதாக அறிவித்து இருப்பாதாக தெரிகிறது.
ஆனால் இதற்கும் அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு மார்ச் 31 ஆம் தேதி வரை அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. இதன் விலை வெளிச்சந்தையில் அதிகரித்தால், உள்நாட்டில் தாராளமாக கிடைக்கவும், விலை உயர்வை தடுக்கவும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது.
சென்ற வருடம் 1 கிலோ அரிசி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. இந்த வருடம் இதன் விலை 1 கிலோ ரூ. 15 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் மாத வாரியாக கொள்முதல் செய்யும் அரிசி பற்றிய விபரங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு வரும் செப்டம்பர் வரை அமலில் உள்ளது.
இதே மாதிரி தனியார் நிறுவனங்கள் ஒரு பருவத்தில் 10 ஆயிரம் டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் செய்தால், அதன் விபரங்களை ஒவ்வொரு மாதமும் மாநில அரசுகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதை மாநில அரசுகள் மத்திய உணவு அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விதிமுறைகள் இருந்தும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்திருப்பதாக அறிவித்து இருப்பதற்கும் மேல், அதிக அளவு எப்படி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதற்காக வர்த்தக அமைச்சகத்திடம் இருந்து அரிசி ஏற்றுமதி பற்றிய புள்ளி விபரங்களை பெற்றுள்ளதாக தெரிகிறது.
2007-08 ஆம் பருவ ஆண்டில் கரீப் பருவத்தில் உற்பத்தியான அரிசி அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரை ஏற்றுமதி செய்யப்படும்.
ஆனால் இந்த வருடம் ஏப்ரல் முதல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்குள் அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதுவே உள்நாட்டு சந்தையில் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது.
இதற்கு ஏற்றுமதியாளர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. பல மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றவில்லை. இவை தனியார் கொள்முதல் செய்த அரிசி பற்றிய தகவல்களை மத்திய உணவு அமைச்சகத்திற்கு அறிவிக்கவில்லை என்று தெரிகிறது.
இதை பற்றி மாநில அரசுகள் அக்கறை செலுத்தவில்லை. இந்த உத்தரவை பின்பற்றாத வர்த்தகர்கள் அள்ளது தனியார் நிறுவனங்கள் மீது அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
தனயார் நிறுவனங்கள் கொள்முதல் செய்துள்ளதாக அறிவித்து இருப்பதற்கும், ஏற்றுமதியாகியுள்ள அரிசிக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. இதை மத்திய அரசு கடுமையான விஷயமாக கருதுகிறது. இது குறித்து விசாரணைத்து வருகிறது. தவறு நடந்து இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.