Publish Date: Fri, 08 Aug 2008 (18:23 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (18:23 IST)
தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியச் சந்தைகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளின் 744 பொருட்களில் 264 பொருட்களுக்கான தடையை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் பட்டியலில் (சென்சிடிவ் லிஸ்ட்) உள்ள 744 பொருட்களில் குறிப்பிட்ட 264 பொருட்களை நீக்குவதுடன், அவற்றுக்கு உரிய சலுகைகளை வழங்கவும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
"தெற்காசியாவில் உள்ள அண்டை நாடுகளின் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் வாய்ப்பை ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று 14 ஆவது தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா உறுதியளித்தபடி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.