Publish Date: Fri, 01 Aug 2008 (12:15 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (12:14 IST)
பி.எப். நிதியை தனியார் நிர்வகிக்க அனுமதி வழங்கியதற்கு காரணம் மத்திய அரசில் கடந்த பதினைந்து தினங்களில் நடந்த அரசியல் மாற்றமே என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாற்றியுள்ளது.
பிராவிடன்ட் ஃபண்ட் என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள ரூ.2 இலட்சத்து 40 ஆயிரம் கோடி உள்ளது. இதில் வருடத்திற்கு ரூ.30,000 கோடி சேர்கிறது. இதை தற்போது பாரத ஸ்டேட் வங்கி மட்டும் நிர்வகித்து வருகிறது.
இந்த நிதியை நிர்வகிக்க தனியார் நிறுவங்களையும் அனுமதிப்பது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை (டிரஸ்டி) கூட்டத்தில் புதன் கிழமையன்று முடிவெடுக்கப்பட்டது.
இதன் படி ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்சியல், ஹெச்.எஸ்.பி.சி. வங்கி, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்களும் பி.எஃப். பணத்தை நிர்வகிக்க அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை ஏற்கனவே இடது சாரி கட்சிகள் குறை கூறியுள்ளன.
இதே போல் பாரதிய ஜனதா கட்சியும் விமர்சித்துள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பி.எப் நிதியை நிர்வகிக்க அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கும் அனுமதி அளித்திருப்பதற்கு காரணம், கடந்த பதினைந்து தினங்களில் நடந்த நிகழ்வுகளே. அரசியல் ரீதியாக எடுத்த முடிவுக்கு, இப்போது பலன் கிடைக்கிறது.
பி.எப் நிதியை நிர்வகிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த விஷயம், இது தொழிலாளர்களின் கடும் உழைப்பால் சேமித்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான தொடக்கமா என்பது பற்றி மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.
இந்த நிதியை நிர்வகிக்க அவசரகதியில் தனியாரை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன, எந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தற்போது பி.எப் நிதியை நிர்வகித்து வரும் பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாட்டில் என்ன குறையை அரசு கண்டது என்று பிரகாஷ் ஜவேத்கர் கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.