Publish Date: Thu, 31 Jul 2008 (18:04 IST)
Updated Date: Thu, 31 Jul 2008 (18:04 IST)
சென்னை முகப்பேர் ஏரிக்கரையில் உள்ள வீட்டுவசதி வாரிய வீடுகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை முகப்பேர் ஏரிக்கரையில் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக 170 உள்ளன. 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடுகள் விற்பனை ஆகாமல் இருந்ததால் அண்ணா பல்கலைக் கழகம், எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக மாணவர்கள் விடுதிகளாக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த வீடுகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. சதுர அடிக்கு ரூ.3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த வீடுகள், தள்ளுபடி விலையில் சதுர அடிக்கு ரூ.980க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடுகளும் 665 சதுர அடி முதல் 758 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.6,19,000 முதல் ரூ.7,04,000 வரை.
இதில் 31 வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இரண்டு வீடுகள் பழங்குடியினருக்குக்கும், 31 வீடுகள் அரசு ஊழியர்களுக்கும், 14 வீடுகள் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 12 வீடுகள் ராணுவத்தினருக்கும், ஏழு வீடுகள் முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்களுக்கும், ஐந்து வீடுகள் பத்திரிகையாளர்களுக்கும், 3 வீடுகள் வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கும், 63 வீடுகள் பொதுவானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.110 ஆகும்.
இந்த விண்ணப்பங்கள் பெசன்ட் நகர், முகப்பேர் ஏரி, முகப்பேர் கிழக்கு, கே.கே.நகர் ஆகியவற்றில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகங்களிலும், சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் வங்கிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆகும். செப்டம்பர் 31ஆம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படுகிறது.