Publish Date: Tue, 29 Jul 2008 (16:27 IST)
Updated Date: Tue, 29 Jul 2008 (16:26 IST)
ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை கால் விழுக்காடும், வட்டி விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்து இருப்பது வங்கி அதிகாரிகள், தொழில் துறையினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மற்ற தரப்பினர் இவை எதிர்பார்த்ததுதான் என்ற ரீதியில் உள்ளனர்.
இது குறித்து பஜாஜ் ஆட்டோ சேர்மன் ராகுல் பஜாஜ் கருத்து தெரிவிக்கையில், “பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் ரீதியான நிர்ப்பந்தம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள். வங்கிகளை வாடிக்கையாளர்கள் அணுக முடியாமல் செய்வதன் மூலம், நீங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை. அதற்கு பதிலாக வளர்ச்சியை தடுக்கின்றீர்கள். உலகம் முழுவதும் பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு உள்ளது. இதில் எதாவது ஒரு நிலையில் விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இணை மேலான்மை இயக்குநர் சந்தா கொசார் கருத்து தெரிவிக்கையில், “பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்துள்ளன. நிறுவனங்களின் கடன் வாங்குவதும், முதலீடு செய்வதும் குறைய வாய்ப்பில்லை. கடன் வாங்குவது 15 முதல் 20 விழுக்காடு வரை நிச்சயமாக அதிகரிக்கும்.
சில்லரை கடன் வளர்ச்சி 5 முதல் 10 விழுக்காடாக குறையும். ஆனால் தொழில், வர்த்தக நிறுவனங்கள் வாங்கும் கடன் பல மடங்கு அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி கடன் வாங்குவதைக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க கூடாது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிக கவனத்துடன் இருக்கிறது. பங்குச் சந்தை அதன் கணிப்புபடி இயங்கும். ஆனால் எங்கள் வங்கி வழங்கும் கடனில் குறிப்பிட்ட அளவு இலாபம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த இலாபத்தை எதிர்பார்க்கும் போது, வட்டி விகிதமும் அதிகரிக்கவே செய்யும். இந்த நிதி ஆண்டின் கடைசி ஆறு மாதங்களிலும் பொருளாதார வளர்ச்சி குறையும்” என்று கூறினார்.
ரூபாய் மதிப்பு உயர வேண்டும்!
ஹிந்துஸ்தான் கன்ஸ்டிரக்சன் என்ற கட்டுமான நிறுவனத்தின் சேர்மன் அஜித் குலாப்சந்த் கூறுகையில், “உள்கட்டுமான துறையில் நீண்டகால முதலீடு செய்ய வேண்டும். வட்டி விகிதம் அதிகரிப்பது நல்லதல்ல. இதனால் முதலீடு குறையும். இப்போது செய்ய வேண்டிய முக்கியான வேலை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகரிக்க அனுமதிப்பதே. ஆனால் ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரிசர்வ் வங்கி வளர்ச்சியை சீர்குலைக்கிறது.
நீங்கள் வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். அதே நேரத்தில் இது அரை விழுக்காடு குறையும் என்றும் கூறுகின்றீர்கள். இதனால் நஷ்டம் அடைவது யார்? வட்டி விகிதத்தை அதிகரிப்பது, தொழில் நிறுவனங்களின் இலாபத்தை பாதிக்கும். எனவே நாம் மூடிய அறையில் இருந்து கொண்டு பணவீக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்பதை விட, திறந்த மனதுடன் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 29 Jul 2008 (16:27 IST)
Updated Date: Tue, 29 Jul 2008 (16:26 IST)