Publish Date: Fri, 11 Jul 2008 (12:57 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)
தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் வருவாயும், நிகர இலாபமும் அதிகரித்துள்ளது.
இந்த நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு வருவாய் விபரங்களை இன்போசிஸ் வெளியிட்டது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஆகிய சூழ்நிலைகளிலும் இன்போசிஸ் வருவாயும் இலாபமும் அதிகரித்துள்ளது.
இந்த முதல் காலாண்டில் இதன் வருவாய் ரூ.4,854 கோடியாக உள்ளது. இது முந்தைய வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 28.7% உயர்வு.
இதன் நிகர இலாபம் ரூ.1,302 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 20.7% அதிகம்.
இதன் ஒரு பங்கு வருவாய் ரூ.22.75 ஆக அதிகரித்துள்ளது (சென்ற காலாண்டு ரூ.18.89)
இதன் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், உலக அளவில் பொருளாதார நெருக்கடி இருந்தாலும், அது குறுகிய காலத்திற்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு நிறுவனங்கள் அவற்றின் அலுவல்களின் திறனை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன என்று கூறினார்.
இன்போசிஸ் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் வடிவமைத்து ஏற்றுமதி செய்கின்றது.
இந்த மூன்று மாதங்களில் இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் புதிதாக 49 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. அத்துடன் 7182 பேரை புதிதாக பணியில் சேர்த்துக் கொண்டுள்ளன. இதில் மொத்தம் 94 ஆயிரத்து 379 பேர் பணிபுரிகின்றனர்.
எங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் வளர்ச்சிக்கு தேவையானதில் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 11 Jul 2008 (12:57 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)