Publish Date: Sat, 28 Jun 2008 (17:52 IST)
Updated Date: Sat, 28 Jun 2008 (17:50 IST)
பிரிட்டனில் வெளிவரும் வணிக நாளிதழான பினான்சியல் டைம்ஸ் தயாரித்த உலகின் 500 தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 13 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 12 இந்திய நிறுவனங்கள் பங்குச் சந்தை வீழ்ச்சியால் முந்தைய பட்டியலில் இருந்து சில தரவரிசைகள் கீழிறிங்கியுள்ளன.
உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கான பட்டியலில் இருக்கும் ஐடிசி (484வது இடம்), ஆர்ஐஎல், ஓஎன்ஜிசி (148வது இடம்), என்டிபிசி (206வது இடம்), எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல் (218), டிஎல்எஃப் (329) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (350) ஆகியவை பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் தரவரிசையில் சில புள்ளிகள் கீழிறங்கியுள்ளன.
இதில் குறிப்பாக முகேஷ் அம்பானியின் ஆர்.ஐ.எல். 80வது இடத்தில் உள்ளது. இது முந்தைய பட்டியலில் 65வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் நிறுவனமாக அமெரிக்கன் எனர்ஜி ஜெயின்ட் எக்சோன்மொபில் இடம்பெற்றுள்ளது. இதன் சந்தை மதிப்பு 452.5 பில்லியன் டாலர்களாகும்.
பினான்சியல் டைம்ஸ் தயாரித்த இந்த பட்டியல், நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் இருக்கும் சந்தை முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியல் கடந்த மார்ச் மாதத்தின் முடிவில் நிறுவனத்தின் சந்தை முதலீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பட்டியல் டிசம்பர் 2007ஆம் ஆண்டின் நிலவரமாகும்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பட்டியலில் சீனாவின் பெட்ரோசினா முதல் இடத்தில் இருந்தது. தற்போது இது இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் ஜிஈ என்ற நிறுவனம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
அடுத்ததாக காஸ்ப்ரோம், சீனா மொபைல், இன்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பேங்க் ஆப் சீனா, மைக்ரோசா·ப்ட், ஏடி அண்ட் டி, ராயல் டட்ச் ஷெல், பி அண்ட் ஜி ஆகியவை முதல் பத்து இடங்களில் வந்துள்ளன.