Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருத்தி உற்பத்தி 11% அதிகரிக்கும்!

பருத்தி உற்பத்தி 11% அதிகரிக்கும்!
, திங்கள், 30 ஜூன் 2008 (11:17 IST)
இந்தியாவின் பருத்தி உற்பத்தி 11 விழுக்காடு அதிகரிக்கும் என்று இந்திய பருத்திக் கழக மேலாண்மை இயக்குநர் சுபாஷ் கெளர் தெரிவித்தார்.

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக சந்தையில் பருத்தி விலை நிர்ணயிக்கும் காரணிகளில் இந்தியாவின் உற்பத்தி, இதன் ஏற்றுமதி வாய்ப்புகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

இந்த வருடம் பருவ மழை போதிய அளவு பெய்யும். அத்துடன் மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடப்படுகின்றது. இதனால் அடுத்த வருடம் பருத்தி உற்பத்தி 11 விழுக்காடு அதிகரிக்கும் என்று சுபாஷ் கெளர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த வருடம் உற்பத்தி 350 லட்சம் பொதிகளாக (1 பொதி-170 கிலோ) உள்ளது. சென்ற வருடம் 315 லட்சம் பொதிகள் உற்பத்தியானது.

இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரிப்பதால், உலக சந்தையில் பருத்தி ஏற்றுமதியில் முன்னணி நாடுகளான அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் போட்டி போட முடிகின்றது. அதிக அளவு பருத்தி இறக்குமதி செய்யும் நாடான சீனா போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய முடிகின்றது.

மத்திய ஜவுளித் துறை ஆணையாளர் ஜெகதீப் நாராயண் சிங் 325 லட்சம் பொதிகள் உற்பத்தியாகும் என்று மதிப்பிட்டுள்ளார்.

ஆனால் விவசாயிகளிடம் இருந்து அதிக அளவு பருத்தி கொள்முதல் செய்யும் இந்திய பருத்திக் கழகம் 350 லட்சம் பொதிகள் உற்பத்தியாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

தற்போது பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 560 கிலோ உற்பத்தியாகிறது. இது முந்தைய வருடத்தைவிட 10 விழுக்காடு அதிகம்.

கடந்த நான்கு மாதங்களில் பருத்தி விலை 38 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துள்ளனர்.

இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், விலை உயர்வதற்கும் மற்றொரு காரணம் அமெரிக்க விவசாயிகள் பருத்திக்கு பதிலாக கோதுமை, சோயா உணவு தானியங்களை பயிர் செய்ய துவங்கியுள்ளனர். இதனால் உலக சந்தையில் இந்திய பருத்திக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சராசரி பருத்தி விளைச்சல் இருமடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அரசு 2002ஆம் ஆண்டில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய அனுமதி வழங்கியது. இந்த வருடம் பருத்தி பயிரிடப்பட்ட மொத்த பரப்பளவான 96 லட்சம் ஹெக்டேரில், மூன்றில் இரண்டு மடங்கு பரப்பளவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 50 விழுக்காடு அதிகம்.

இந்த வருடம் பருவ மழை சராசரி அளவு, அல்லது சராசரியைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பருத்தி உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் இது வரை இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் இருந்து 9,85,000 பொதி பருத்தி கொள்முதல் செய்துள்ளது. இதில் ஏற்றுமதியாளர்களுக்கு 1,73,000 பொதிகளை விற்பனை செய்துள்ளது.

இந்த வருட பருத்தி பருவ இறுதியான செப்டம்பர் மாத இறுதிக்குள் 850 பேல் பருத்தி சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இது சென்ற வருடத்தைவிட 47 விழுக்காடு அதிகம் என்று பருத்தி ஆலோசனை வாரியம் கருதுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil